வெள்ளி, 14 அக்டோபர், 2011

உளறல் 36

இஃது எமக்குச் சத்திய சோதனை காலம்...

வாழ்க்கையில் பல சத்திய சோதனைகளைக் கடந்தாலும் இஃது இக்கட்டான ஒரு கால கட்டம்...

உண்மைக்கும்
நமது உறவுகளுக்கும்
நமது வாழ்க்கையுடன் பிணைந்துள்ள சமூகச் சூழலுக்கும்
நடுநிலைத் தவறாத கொள்கைக்கும்

இடையில் நடக்கும் மாபெரும் போராட்டம்...

உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது; ஓரளவு உணரவும் முடிகிறது; ஆனால் நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல்கள் எழுகின்றன...

சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத உறவுகளுக்குள்ளும் உண்மைகள் உள்ளன என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள இயலாது.

சிலவேளைகளில் அவை சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறவுகளுக்கிடையே உள்ள உணர்வுகளைவிட ஆழமானவையாகவும் பொருள் பொதிந்தவையாகவும் இருக்கும் என்பதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது...

சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று எப்போதுமே தவறான ஒன்றாகத்தான் இருக்கும் என்று அனைவராலும் முத்திரை குத்தப்படுகிறது.

சமூகம் கூறுவதால் மட்டுமே அவை தவறாகிவிடுமா என்பதே எமது வினா...

தவறுகளே மனிதனைப் பண்படுத்துகின்றன என்ற கருத்தை எப்பொழுதோ உணர்ந்தவளெனினும்
தவறுகள் உண்மையாகவே தவறுகள்தாமா என்பதை நாம் ஆராய வேண்டும் என்பதே ஏற்புடைய சிந்தனையாக இருக்கும் என்று கருதுகின்றேன்...

பால் இனிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையெனினும் காய்ச்சல் கண்டவனுக்கு அதே பால் புளிக்கும் என்பதும் உண்மையே என்பதை அனைவரும் மறந்து விடுகின்றோம்...

சூழலுக்கேற்ப உண்மையும் மாறுபடும் என்பதே நாம் சிந்திக்காத ஓர் உண்மையாக இருக்கிறது...

வலிகளை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களே மனிதர்களில் வாழ்கின்றவர்கள் என்பதால்...

இவர்கள் சத்திய சோதனைகளுக்கு ஆட்பட வேண்டும் என்பதே இயற்கையின் நியதி; இறைவனின் ஆணை....

எனவே இச்சத்திய சோதனையில் வலிகள் என்பன நம்மைப் பக்குவப்படுத்த இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடை என்பதையும் உணர்கின்றேன்...
வாழ்வினைப் போராட்டங்களுக்கிடையே அமைதியாகவும் தொடர்கின்றேன்...

முதலில்,
உண்மையை உலகத்தி தேடினேன்...
பிறகு,
என்னுள் தேடினேன்...

இப்பொழுது,

இறுதி உண்மை என்னை நாடி வரும் என்பதை உணர்ந்து,
எப்பொழுது வரும் என்பதைத் தெரிந்து கொள்ள பொறுமையுடன் காத்திருக்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...