ஞாயிறு, 16 அக்டோபர், 2011

உளறல் 38

ஏதோ அவ்வப்போது என் சிந்தனைக்கு வரும் சில கருத்துகளையே இங்குக் கிறுக்கி வைக்கின்றேன்...

இதைப் படிக்கின்றவர்கள் இதில் என்னைத் தேட முயல வேண்டாம்...
உங்களைத் தேடுங்கள்...
உண்மையைத் தேடுங்கள்...

இவை அனைத்தும் முடிந்த முடிவுகள் அல்ல...

ஏதோ ஒரு உளறலில்
உங்களையோ
உங்கள் அன்பிற்குரியவர்களையோ
உங்களுடன் உறவாடும் சில மனிதர்களையோ
உங்களுக்குச் சரியெனப் படும் உலகியல் உண்மைகளையோ

காண முடிந்தால்...
வாசிப்பதைத் தொடருங்கள்!

காண முடியவில்லையெனின்...
காணும் வரை காத்திருங்கள்...

வசதிகளுடன் வாழ்ந்த வரை சித்தார்த்தன் சித்தார்த்தனாகத்தான் வாழ்ந்தான்!
வசதிகளைத் தூக்கியெறிந்த பின்னரே புத்தனானான்...

இனிப்பில் வீழ்ந்து மிதக்கும் எறும்பு மகிழ்ச்சியிலே சிறிது நேரம் திளைக்கும்...
அங்குதான் அதன் இறுதி முடிவும் தொடங்குகிறது என்பதை அறியாமலே!

மகிழ்ச்சியும் மனிதனுக்கு மறைப்பை ஏற்படுத்தும் என்பதை உணராத மனிதன்
தனது முடிவைத் தனக்குத் தெரியாமலே தேடிக் கொள்கின்றான்...

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் தானும் வாடியதாக பாடிய வள்ளலாரை எண்ணும் போது ஓர் உண்மை வெளிப்படுகிறது...
இங்கு வள்ளலாரின் இரக்க குணம் தென்படுவது உண்மைதான்...
ஆயினும் அவ்வேளையில் அவர் தெளிந்த ஞானம் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை...

அவனருளாலே அனைத்தும் நடப்பதால்...
அதுவே இறைவனின் ஆணை என்பதால்...
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதால்...

இதற்கெல்லாம் வருத்தப்பட நாம் யார் என்பதே எமது சிந்தனையாகும்...

இறுதிக்காலத்தில்தான் வள்ளலார் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு,
தனித்திருந்து தெளிந்த ஞானம் பெற்றார்...

இதைக் கொண்டே அவர் படிப்படியாகவே பக்குவ முதிர்ச்சி பெற்றார் என்பதை என்னால் உணர முடிகிறது...

இதுவே அவரது வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்தும் பாடல்களிலிருந்தும் நான் தெரிந்து கொண்ட உண்மையாகும்...

எனவே,
என்னைப் பொருத்த வரை வாழ்க்கையில் கற்றல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது...
இவ்வுலகமெனும் பாட நூலை நாம் படித்துக் கொண்டே இருக்கின்றோம்...
இறைவன் போதித்துக் கொண்டே இருக்கிறான்...
நமது பக்குவத்திற்கு ஏற்பவே நாம் உண்மையை உணர்ந்து கொள்கின்றோம்...

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் என்ற வள்ளுவனின் வாக்கும்...

எவ்வாறு காண்பான் அறிவு தமக்கு எல்லை அவ்வாறு அருள் செய்வான் ஆதி அரன் என்ற திருமூலரின் வாக்கும்...

என்னைச் சிந்திக்க வைத்தன...
இந்த உலகம் அதுவே உண்மையென உணர்த்துகிறது...

என் அனைத்துச் செயல்களுக்கும் இறைவனே கருத்தா...
நான் கருவி மட்டுமே என்பதை உணரும் காலம் தொடங்கி விட்டதைப் போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது...

இஃது என் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்ல...

யார் செய்தாலும் தவறு தவறுதான்...

அவரவர் வினைக்கான விளைவுகளை அவரவே எதிர் கொள்ள வேண்டும் என்பதும் யாம் அறிந்த, உணர்ந்த உண்மையே!

தவறுகளுக்கான தண்டனையை ஏதோ ஒரு வகையில் பெற்றுதான் ஆக வேண்டும் என்பதே இயற்கையின் நியதி; அஃதே இறையாணையுமாகும்...

உண்மை தெரிய வேண்டுமானால் உலக வரலாற்றைப் படியுங்கள்; பாருங்கள்; உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் கேளுங்கள்...

எங்குமே விடை கிடைக்கவில்லையெனின் உங்களிடமே கேட்டுப் பாருங்கள்; திண்ணமாய் விடை கிடைக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...