ஞாயிறு, 16 அக்டோபர், 2011

உளறல் 37

நமது வாழ்க்கைப் பட்டறிவினை அழகிய சொற்களால் வடிவமைத்து, தொகுத்துக் கூறப்படும் கருத்துகள், மற்றவர்களால் தத்துவங்களாகப் போற்றப்படுகின்றன; ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

அவை அனைவருக்கும் ஏற்புடையவையா என்பதை யாரும் சிந்திப்பதில்லை; சீர்தூக்கிப் பார்ப்பதில்லை.

எனக்குச் சரியாகப் படும் ஒன்று அனைவருக்குமே சரியாகப் பட வேண்டும் என்ற நிலையே கருத்தாதிக்கத்திற்கும் அடிமைச் சிந்தனைக்கும் வழிகோலுகின்றன.

இவ்வாறான சூழலில் நாம் எவ்வாறு ஒருமைப்படுவது என்ற வினா எழலாம்...
நாம் ஒருமைப்படுவதை இவ்வாறுதாம் விலக்கி வைத்திருக்கிறது இயற்கையின் நியதி என்பதை உணரும் வரை மனிதனின் உளப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்...

விட்டுக் கொடுத்தால் ஒருமைப்பாடு வளரும் என்பது பலரது கருத்தாகும்...
என்னைப் பொருத்தவரை விட்டுக்கொடுப்பது என்பதும் தன்னல அடிப்படையிலேதான்...

மனிதன் தன் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ளவே விட்டுக்கொடுத்துத் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறான்...

பொருள், இன்பம், தன்னிறைவு என்று அஃது எதுவாகவும் இருக்கலாம்...

ஆனால் ஒன்றைப் பெறுவதே அடிப்படை நோக்கமாக இருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்களால்தாம் உணர முடியும்...

எனவே தன்னலம் இல்லாத உறவுகள் உள்ளனவா என்பதையும் ஆழ்ந்து நோக்க வேண்டும்...

தன்னலத்தில் உயர்வு, தாழ்வு என்ற நிலை வேண்டுமானால் தோன்றலாம்; தன்னலமே இல்லை என்ற நிலை தோன்ற வாய்ப்பில்லை என்றே கருதத் தோன்றுகிறது...

அப்படியாயின் யார், யாருடைய கருத்தாதிக்கத்தில் இருந்து, அக்கருத்துகளுக்கு ஆட்பட்டு வளர வேண்டும்?
யாருடைய கருத்து உயர்வானது?
யாருடைய கருத்துத் தாழ்வானது?
இதை எவ்வாறு உறுதி செய்வது?
அக்கருத்து நமக்கு ஏற்புடையதாக இருக்குமா?

மேற்கண்டஅனைத்து வினாக்களுக்கும் விடை தேட வேண்டுமெனின் குழப்பமே மிஞ்சும்...

மிகுந்த குழப்பத்திற்குப் பின் ஓரளவு தெளிவு பிறக்கலாம்; ஆனால் மீண்டும் மீண்டும் குழப்பங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்...

தேடல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...

வினையொழிவு ஏற்படும் ஒருவருக்கே தேடல்கள் இருக்காது...

முதலில் அக நிலையில் ஏற்படும் வினையொழிவு தொடர்ந்து புறநிலையில் ஏற்படும்...

முற்றாக வினையொழிவு ஏற்பட்ட பின்னரே ஒருமை நோக்கு உருவாகும்...

இங்குப் பற்றுகள் முழுமையாக அறும்...

இதனுடன் சேரும் அனைத்தும் இயல்பாகவே அத்தன்மையதாகவே ஆகிவிடும்...

கருத்தாதிக்கம், அடிமைச் சிந்தனை, அடிமைப் படுதல், கட்டுப்படுத்துதல் என்ற நிலை இங்குக் கிடையா...

வேறுபாடுகள் தோன்றா...

தீயில் போடப்படும் பொருள் தீயின் தன்மையையே பெறும் என்பதே இயற்கையின் நியதியும் இறையாணையுமாகும்...

அதுவே நாம் தேடும் செம்பொருள்...
மெய்ப்பொருள்...
சிவம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...