வியாழன், 10 நவம்பர், 2011

உளறல் 41

நான் மனிதர்களை விட்டு அதிகம் விலகுகிறேன் என்பதை உணர்கின்றேன்...

இப்பொழுது உண்மைகள் எனக்குத் தெளிவாக உணர்த்தப்படுகின்றன என்பதை ஓரளவு உணரத் தொடங்கி விட்டேன்...

உண்மைகள் தெளிவாகத் தெரியும் போது அனைத்தையும் உதறிவிட முடியும்.
ஏனெனில் மற்றவை அனைத்தும் அந்நேரத்தில் பொருளற்றவையாகி விடுகின்றன...

வாழ்க்கை முழுமையும் நாம் மகிழ்ச்சியைத் தேடியே அலைகின்றோம்.
நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, நமக்கு வாழ்க்கையைப் பற்றிய மறைப்பையே ஏற்படுத்துகின்றன என்பதனை மனிதன் உணராதிருக்கும் வரை அவன் வாழ்க்கை ஒரு நீண்ட தொடர்கதையே!

உலக வாழ்க்கையில் நிறைவு என்பது முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மையாகும். எனவே உலகப் பற்றுகளை முழுமையாகத் துறக்கின்றவனே நிறைவை நோக்கிச் செல்ல முடியும்...

இது முயற்சியாலும் பயிற்சியாலும் கிடைக்காத ஒன்று; இறையருளால் இயற்கையாகக் கிடைக்கும்.

இந்த உலக வாழ்க்கையில் நாம் இருக்கும் வரை மற்றவர்களை நிறைவு படுத்த போலியாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது...
போலியை வெறுக்கும் மனம் வாழ்க்கையிலிருந்தும் விலகி நிற்க கற்பிக்கிறது என்ற உண்மையை உணர முடிகிறது...

இதன் முடிவு தெரியவில்லையெனினும் உண்மையைத் தேடும் முயற்சியும் எம்மிடம் இல்லை...

உணர்த்தப்பட வேண்டிய நேரத்தில் உண்மைகள் உணர்த்தப்படும் என்பதால் உண்மையின் வரவுக்காக அமைதியாகவே காத்திருக்கிறேன்...

அவரவர் சிந்தனைக்கு ஏற்பவே வாழ்க்கை அமையும் என்பதால் மற்றவர்களின் வாழ்க்கையின் போக்கை நம்மால் தீர்மானிக்க இயலாது என்ற உண்மையை உணர்ந்தாலும் நாம் இருக்கும் வரை,
உலகம் பயனுற வாழ முடியவில்லையெனினும் ஒரு சிலராவது பயனுற வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது...

சிந்திக்கத் தெரிந்த மனிதனால்தான் வாழ்க்கையின் உண்மையான பாதையில் செல்ல முடியும்...

நம்மால் வழி காட்ட முடியும்; இயலுமாயின் சிறிது தூரம் அவர்களுடன் சென்று வழி காட்டலாம்; இறுதி வரை அவர்களுடன் செல்ல இயலாது.

அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களே செல்ல வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும். வழிகாட்டிகள் வழியைக் காட்டுமே தவிர நம்மைக் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காது என்பதை அனைவரும் உணர வேண்டும்...

எனவே, சிந்திக்கும் மனிதனே வாழத் தொடங்குகின்றான் என்ற உண்மை நமக்குத் தெரியும் வரை நாம் வாழவில்லை என்பதை உணர்ந்து கொள்வோம்.

உயர்வான சிந்தனை மனிதனுக்கு வாழ்க்கையில் நிறைவைத் தரும் என்பதால் நமது சிந்தனையும் உயர்வை நோக்கியே இருக்க வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...