வியாழன், 17 நவம்பர், 2011

என்னைக் கவர்ந்த குறுந்தொகைப் பாடல்...

எட்டுத் தொகை நூல்களும் பத்துப் பாட்டு நூல்களும் சங்ககால இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை சங்ககால மக்களின் காதல், வீரம், கொடை, செங்கோல் மாண்பு, மெய்யறிவு சிந்தனை முதலான இன்னோரன்ன அம்சங்களைப் பாடுகின்றன. காலத்தால் அழியாத அரும் பொக்கிஷங்களாகத் திகழும் இப்பாடல்களின் இலக்கியச் சுவையை நுகர்ந்து அனைவரும் இன்புற வேண்டும் என்பது எமது அவா. அந்த வகையில், குறுந்தொகைப் ...பாடல் ஒன்றை இங்கு தருகின்றேன்:

குறுந்தொகைப் பாடல் : எண் நாற்பது.
ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.
திணை - குறிஞ்சி / தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!

பொருள்: என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் முன்பின் அறிமுகமானவர்கள் அல்லர். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்களுமல்லர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவும் இல்லை. எனினும், செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எவ்வாறு உருமாறி பிரித்தறிய முடியாதபடி, மண்ணின் தன்மையோடு இரண்டறக்கலந்து விடுமோ அதுபோல இந்தக் கணத்தில் நம் இருவருடைய உள்ளங்களும் ஒன்று கலந்து விட்டனவே!

இப்பாடலிலே, கண்டவுடன் காதல் வசப்பட்டுவிட்ட தலைவனினதும் தலைவியினதும் மனவுணர்வு அழகிய உவமை ஒன்றினூடே வெகு இலாகவமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. முதற் பார்வையிலேயே ஆண்டாண்டு காலம் ஆழ்ந்து பழகியதான உணர்வு எழுந்துவிட்டதை, செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் தானும் செந்நிறம் கொண்டு பிரித்தெடுக்க முடியாதவாறு கலந்துவிடுவது போல, அன்புகொண்ட உள்ளங்கள் இரண்டும் இரண்டறக் கலந்துவிட்டனவே என்று வியப்புணர்வோடு தலைவன் பாடுவதாக அமைத்துள்ளார், புலவர். பிற்காலத்தில் இப்பாடல்களைத் தொகுத்தவர்கள் புலவரின் பெயர் தெரியாததால் அவரை, "செம்புலப் பெயனீரார்" என்று அவர் கையாண்ட உவமையினையே காரணப் பெயராகக் கொண்டு பதிவுசெய்தமை, இந்த மனதை அள்ளும் உவமைக்குக் கிடைத்த சிறப்பு என்பதில் ஐயமில்லை அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...