வியாழன், 22 செப்டம்பர், 2011

உளறல் 32

முடிக்க வேண்டிய பணிகளை விரைவில் முடிக்கவும் மெய்ப்பொருள் காணவும் இறைவனின் அருள் வேண்டி நிற்கும் தருணம் இது...
உறவுகள் அனைத்தும் தாமரை இலை தண்ணீர் போல இருக்க இறைவன் அருள வேண்டும்...
இறுதி வரை நம்முடன் வருவது எதுவுமில்லை என்று தெரிந்தும் உலக வாழ்க்கையின் மீது ஏற்படும் சிறிய நாட்டம் கூட நம்மைப் பெரிதும் வருத்தி விடுகிறது. இஃது இயற்கையின் நியதி எனினும் அவாவினால் உந்தப்படும் மனிதன் அதன் போக்கிலே சென்றுதான் உண்மையை உணர வேண்டும்...


’அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற உயரிய உண்மை எனக்குச் சிறிது சிறிதாக உணர்த்தப்படும் தருணமென்றே இதைக் கருதுகின்றேன்...


மனித இயல்பிலிருந்து இன்னும் முழுமையாக விடுபட முடியவில்லையெனினும் அதற்கான அறிகுறிகள் தொடங்கி விட்டன என்பதை உணர்கின்றேன்...


நமக்கு ஏற்படும் அவா மட்டும் நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; நம் அன்பான உறவுகளின் அவாவும் நம் மீதே ஏற்றப்பட்டு, அதற்கான வினையையும் நாமே ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது...


தொடக்கத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அவா இருந்தது. கடுமையான உழைப்பினால் சிறிது சிறிதாக வெற்றி கிட்டியபொழுது, அதன் வழி கிடைத்த பாராட்டுகளினாலும் புகழ்ச்சிகளினாலும் மயக்கம் களைந்தது...


அப்பாராட்டுகளினாலும் புகழ்ச்சிகளினாலும் மற்றவர்களின் நிறைவை உணர முடிந்தது; அதன் வழி எனக்கு ஒரு தன்னிறைவு ஏற்பட்டது என்பதுதான் உண்மை...


இப்பொழுது அதுவும் இல்லை என்பதை உணர்கின்றேன்!


இவற்றையெல்லாம் நான் ஏன் செய்தேன், எதற்குச் செய்தேன், எப்படிச் செய்தேன் என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் போது...
அனைத்தும் ஒரு சிலருக்காக, அன்பின் அடிப்படையிலே நான் செய்தது; அஃது மற்றவர்க்கும் நன்மை பயத்தது என்பதுதான் உண்மை...
எனவே இப்புகழ்ச்சி, பாராட்டுகள் அனைத்தும் அவர்களுக்கே போய்ச் சேர வேண்டும் என்பதே என் எண்ணமாகும்...
இதன்வழி ஏதேனும் புண்ணியங்கள் கிடைப்பின் அஃதும் அவர்களையே சாரும்...


நான் கருவி மட்டுமே...


சொல்வது கண்ணன்; செய்வது கண்ணன் என்ற கீதையின் வாசகம் நினைவுக்கு வருகிறது...
மெது மெதுவாக அதை உணரவும் முற்படுகின்றேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...