புதன், 30 நவம்பர், 2011

உளறல் 43

இவ்வுலகில் வாழும் வரை எந்தவோர் எதிர்பார்ப்புமின்றி வாழ இறுதிக்கட்ட போராட்டத்தில் நுழைந்திருக்கிறேன் என்றே கருதுகின்றேன்...

வினைகளின் பலனில் பற்றின்மை என்பது சிறிது சிறிதாக ஏற்படுவதை அவ்வப்போது உணர முடிகிறது....

இதன் முடிவு தெரியவில்லையெனினும் என்னைப் பொருத்த வரையில் நான் சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறேன் என்றே கருதுகின்றேன்...

இதுநாள் வரை இவ்வுலக வாழ்க்கையில் நான் பெற்றதை விட இழந்ததே அதிகம் என நினைத்திருந்தேன்.

ஆனால் இன்றோ நான் இழந்தது அனைத்தும் நன்மைக்கே என்பதை ஓரளவு உணர முடிகிறது; இனி இழக்கப் போவதும் நன்மைக்கே என்றே உணர்கின்றேன்...

இப்பொழுதெல்லாம் நான் மற்றவர்கள் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்களுடைய பக்குவத்தின் அளவில்தான் சிந்தனையும் இருக்கும் என்பதை நன்கு உணர்ந்துள்ளேன். எனவே யாரையும் குறை கூறுவது என்பது எனக்குப் பிடிக்காத ஒன்றாகிவிட்டது. எனக்குத் தேவை எவை என்பதை மட்டும் மற்றவர்கள் நேரம் வரும் போது தாமாகவே புரிந்து கொள்ளட்டும். அதுவரை அமைதியாகவே வாழ்க்கையைத் தொடர முயல்கின்றேன்.

அவரவர் அவரவரின் நிலைக்கேற்பவே செயல்படுவர். செயலின் பலனும் அதற்கேற்பவே அமையும் என்பதை அவர்கள் தாமாகவே உணர்வர். எனவே இதில் எனது முயற்சிகள் என்று எவையும் தேவைப்படா என்றே கருதுகின்றேன்.

இறைமையை நம்பாதவர்கள் கூட இயற்கை விதியை நம்பித்தான் ஆக வேண்டும். இதில் பார்வை வேறே தவிர பொருள் என்பது ஒன்றுதான். உலக இயக்கத்தில் அனைத்தும் நேர்த்தியாக நடக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்தே இதைத் தெளிந்து கொள்ளலாம். ஆனால் பார்வையில்தான் ஆழம் வேண்டும். பக்குவம் உயரும் போது பார்வையின் ஆழமும் தானே உயரும்.

தன்னிறைவுக்காக வாழ்வதே மனித வாழ்க்கை; பிறருக்காக வாழ்கின்றோம் என்பது ஒரு பொய்த் தோற்றம்.

நமது வாழ்க்கை வேண்டுமாயின் பிறருக்குப் பயனாக அமையலாம். ஆனால் நாம் நமது நிறைவுக்காவே வாழ்கின்றோம் என்பதுதான் உண்மை நிலை...

விட்டுக்கொடுத்தவர்களுக்குக் கூட நான் விட்டுக்கொடுத்தேன் என்றவொரு  மகிழ்ச்சி கிடைத்திருக்கும்; அதுவே நான் கூறும் தன்னிறைவாகும்.

எனவே,
நாம் நமக்காகத்தான் வாழ்கின்றோம் என்பதே உண்மை!

1 கருத்து:

  1. உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள் ! தமிழை போற்றுவோம்

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...